பிஹெச்இஎல் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி: டி.கே.ரங்கராஜன் எம்.பி. கண்டனம்
திருச்சி: பிஹெச்இஎல் நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவுக்கு சிபிஎம் கடும் கண்டணம் தெரிவி்த்துள்ளது.
இது குறித்து பிஹெச்இஎல் தொழிலாளர் சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கடந்த திங்கட்கிழமை கூடிய பிஹெச்இஎல் நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு கொடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இது மிகவும் ஆபத்தான செயலாகும்.
அதுவும் பிஹெச்இஎல் நிறுவனத்தின் நிகர லாபம் 40 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இயக்குநர் குழு இப்பரிந்துரையை அளித்துள்ளது மிகவும் கவலை அளிக்கிறது.
பொதுத்துறைகளை, அதுவும் அதிக லாபம் ஈட்டும் பொதுத் துறைகளின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது என்ற மத்திய அரசின் கண்மூடித்தனமான போக்கிற்கு பிஹெச்இஎல் நிர்வாகமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இப்படி சிறுகச்சிறுக பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பது என்பது, ஒட்டு மொத்தமாக நிறுவனத்தை தனியாரின் கைக்கு மாற்றுவதற்கான திட்டமாக கருத வேண்டியுள்ளது.
மின்சார உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைப்பது என்ற மத்திய அரசின் திட்டத்தை செயலாக்கிட, பிஹெச்இஎல் பங்கு விற்பனை வழி வகை செய்யும்.
எனவே, பிஹெச்இஎல்-ன் இந்த முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளும், பிஹெச்இஎல் தொழிலாளர்களும் இணைந்து போராடுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.