ஆலங்குளம் அருகே நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு, அரிவாள் வெட்டு: 4 பேர் படுகாயம்
ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே காற்றாலை நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஆலங்குளம் அருகேயுள்ள கல்லத்திக்குளத்தைச் சேர்ந்தவர் ராயம்மாள். இவரது தங்கைகள் ஞானம்மாள், பாக்கியம். இவர்களுக்கு அங்கு 12 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 30 லட்சம். அங்கு செயல்படும் ஒரு தனியார் காற்றாலை நிறுவனத்தின் விரிவாக்கப் பணிக்காக நிலம் தேவைப்படவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராயம்மாள், ஞானம்மாள், பாக்கியம் ஆகியோரை அதன் மேலாளர் அணுகினார்.
அதில் ஞானம்மாள், பாக்கியம் ஆகியோர் மட்டும் காற்றாலைக்கு நிலத்தை விற்றனர். ஆனால் ராயம்மாள் மட்டும் நிலத்தை விற்க மறத்து விட்டார். ராயம்மாளுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் வழியாகதான் காற்றாலை நிறுவன ஊழியர்கள் சென்று பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கு ராயம்மாளும், அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ராயம்மாள் சிவலர்குளத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய பெண் கவுன்சிலர் வன்னியம்மாளின் கணவர் கதிர்வேல், முருகன் உள்பட 7 பேர் நேற்று மதியம் காற்றாலை நிறுவனத்திற்கு சென்றனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையை கைவிட்டு ராயம்மாள் தரப்பினர் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு ராயம்மாள் நிலம் வழியாக காற்றாலையைச் சேர்ந்த கனகராஜ், இசக்கிமுத்து, ஆறுமுகம், முருகன் ஆகியோர் சென்றனர். அப்போது அங்கு வந்த கதிர்வேல், முருகன் உள்பட 7 பேர் அவர்களிடம் தகராறு செய்தனர்.
தகராறு முற்றவே கதிர்வேல் தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியால் இசக்கிமுத்துவை சுட்டார். மற்றவர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் இசக்கிமுத்துவுக்கு காலில் இரு தோட்டாக்கள் பாய்ந்தன. படுகாயம் அடைந்த கனகராஜ் உள்பட 4 பேரும் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த நெல்லை எஸ்.பி. விஜேயந்திர பிதாரி, டி.எஸ்.பி.க்கள் மரிய ரோணிக்கம், ஜமீர், இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன், பிரகாஷ், பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கல்லதிக்குளத்தில் பதற்றம் நிலவுகிறது.