ரூ. 20 லட்சத்திற்கு பஞ். தலைவர் பதவி ஏலம்-விரைந்து சென்று தடுத்தார் கலெக்டர்
முன்னதாக, இந்த ஏலம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தங்கராசு, டி.செல்லக்கண்ணு, ஒன்றியச் செயலாளர் பி. மாயக்கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினர் வி.ஆர்.முத்துப்பேயாண்டி ஆகியோர் மாவட்ட கலெக்டர் சகாயத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில்,
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் அய்யனார் குளம் ஊராட்சி தலைவர் பதவியை கடந்த மூன்று முறையாக லட்சக் கணக்கான ரூபாய்க்கு ஏலம் விட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஊராட்சித் தேர்தல் நடப்பதற்கு முன்பே ரூ 20 லட்சம் வரை ஏலம் எடுப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.
அதே போன்று ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவியை ரூ 10 லட்சத்திற்கும் ஊராட்சி துணைத் தலைவர் பதவியை ரூ 5 லட்சத்திற்கும் ஏலம் விடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் இது போன்ற நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜனநாயகத்திற்கு சவால் விடும் இந்த பிரச்சனை மீது மாவட்ட கலெக்டர் தாங்கள் கவனம் செலுத்தி, அய்யனார் குளம் ஊராட்சியை ஏலம் விடும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அய்யனார் குளத்திற்கு விரைந்தார் கலெக்டர் சகாயம். அங்கு நடந்து கொண்டிருந்த ஏலத்தை அவர் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஏலம் மீண்டும் நடைபெறாமல் கண் கொத்திப் பாம்பாக கலெக்டர் கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிபிஎம் எழுப்பியுள்ளது.