ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்-மீன்பிடிப்பு ஸ்தம்பிப்பு
திங்கள்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேரையும், அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று விட்டனர். அவர்களை தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மன்னார் கோர்ட்டில் ஆஐர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை தற்போது அனுராதபுரம் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இன்று அந்தப் போராட்டம் தொடங்கியது. இதனால் கிட்டத்தட்ட 1000 விசைப்படகுகளும் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு நிரந்தர முடிவு கட்ட மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மீனவர்கள் கோருகின்றனர்.
கோட்டைப்பட்டனத்திலும் போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக கோட்டைப்பட்டனம் பகுதியிலும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.