ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டம்-கருணாநிதி புறக்கணிப்பு-பாலு பங்கேற்பு
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. அதேசமயம், திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.
2ஜி ஊழல், ஊழலுக்கு எதிரான போராட்டம், லோக்பால் மசோதா என ஏகப்பட்ட பிரச்சினைகளுக்குள் மூழ்கிப் போயுள்ளது மத்திய அரசு. இந்த நிலையில், மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரும் இதேபோல 2ஜி விவகாரத்தால் ஸ்தம்பித்துப் போனது. இதன் இறுதியில் ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தற்போது தயாநிதி மாறனை எதிர்க்கட்சிகள் குறி வைத்துள்ளனர். இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அம்புகளை எப்படி சந்தித்து முறியடிப்பது என்பது குறித்து ஆலோசிக்க நேற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.
இதில் பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்க முதல்வரும் திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று டெல்லியில்தான் இருந்தார். ஆனால் அவர் கூட்டத்துக்குப் போகாமல் புறக்கணித்து விட்டார். அவருக்குப் பதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.