
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் தங்களுக்கு முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட 997 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் பறிப்பது தொடர்பாக மமதா பானர்ஜி அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி டாடா நிறுவனம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த இடதுசாரி அரசில், சிங்கூரில் நானோ ஆலை அமைப்பதற்காக பெருமளவில் நிலம் கொடுத்தது. இதை எதிர்த்து அங்கு பெரும் பிரச்சினை வெடித்தது. மமதா பானர்ஜி தலைமையில் நடந்த கிராம மக்களின் போராட்டத்தால் டாடா நிறுவனம் சிங்கூரை விட்டு குஜராத்துக்கு இடம் பெயர்ந்தது.
இந்த நிலையில் சிங்கூரில் டாடா நிறுவனத்திற்குத் தரப்பட்ட 997 ஏக்கர் நிலத்தையும் பறிமுதல் செய்து மீண்டும் கிராம மக்களுக்கே வழங்கும் வகையில் சட்டத்தைக் கொண்டு வந்தார் முதல்வர் மமதா பானர்ஜி.
இதையடுத்து டாடா நிறுவன கதவில் இதுதொடர்பான நோட்டீஸும் ஒட்டப்பட்டது. இதை எதிர்த்து இன்று டாடா நிறுவனம் சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


















