நெல்லை மாநகர பெண் போலீஸ் மாயம்: போலீசார் தேடல்
நெல்லை: நெல்லை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பெண் போலீசை திடீர் என காணாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அழகானமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகள் சைபா சுந்தர். இவர் நெல்லை மாநகர ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் பாளை பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 17-ம் தேதி சைபா சுந்தர் 1 நாள் விடுப்பு எடுத்துள்ளார். மறுநாள் இவர் பணிக்கு செல்லாததால் இவருடைய மேல் அதிகாரி ஆயுதப்படையில் அவர் தங்கி இருந்த காவலர் அறையில் தொடர்பு கொண்டு தேடினார். அங்கும் அவரை காணவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள சைபாவின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அங்கும் சைபா செல்லாததால் அவரது தந்தை சுந்தர்ராஜன் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.
சைபா போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும்போது யாராவது காதல் வசப்படுத்தி கடத்தினார்களா அல்லது வெளியூர் காதலர்கள் திருமண ஆசை காட்டி அவரை கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.