பொய் பேசுவது யார்?: சாமி முன்பு சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி
எதியூரப்பா மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார் குமாரசாமி. இதை தொடர்ந்து மறுத்து வருகிறார் எதியூரப்பா. இந்த நிலையில் தன்னுடன் சமரசம் பேச அணுகினார் எதியூரப்பா என்று பரபரப்பு புகாரைத் தெரிவித்தார் குமாரசாமி.
இதை கடுமையாக மறுத்த எதியூரப்பா, நீங்கள் சொல்வது உண்மை என்றால் தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி கோவில் முன்பு சத்தியம் செய்யத் தயாரா என்று சவால் விட்டார். இதை குமாரசாமியும் ஏற்றார்.
இதையடுத்து 27ம் தேதி இருவரும் சாமி முன்பு சத்தியம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் சத்தியம் செய்யும் நிகழ்ச்சிக்காக 26ம் தேதியே தர்மஸ்தலா செல்கிறார் எதியூரப்பா. தனது குடும்பத்தோடு அவர் போகிறார்.
குடும்பத்தினர் முன்னிலையில் சாமி முன்பு நான் சத்தியம் செய்வன் என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், குமாரசாமியும் 26ம் தேதியே தர்மஸ்தலா செல்கிறார். ஆனால் எதியூரப்பா போல தான் குடும்பத்தோடு போகவில்லை என்றும் தனியாகப் போவதாகவும் கூறியுள்ளார் குமாரசாமி.
இவர்களது இந்த 'சத்திய சோதனை'யால் கர்நாடக மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்!