தில்ஷனை கொன்ற ராணுவ வீரரை தமிழக போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்- ஜெயலலிதா
மத்திய திட்டக் கமிஷன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெயலலிதா இன்று டெல்லி சென்றார். வழக்கமாக இந்தக் கூட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து நிதியமைச்சர்கள்தான் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை ஜெயலலிதாவே சென்றுள்ளார்.
டெல்லி வந்து சேர்ந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், 13 வயது சிறுவன் தில்ஷனை ராணுவக் குடியிருப்புக்குள் சுட்டுக் கொன்றது ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அது தெளிவாகவே அனைவருக்கும் தெரியும். இதில் ஈடுபட்ட ராணுவத்தைச் சேர்ந்தவரை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராணுவத்திற்கு கூறியுள்ளோம் என்றார் ஜெயலலிதா.
இதற்கிடையே, திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக தமிழகத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் இன்று மாலையே சென்னை திரும்புகிறார். இதனால் அவர் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.