சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து தலைவர் மகன்கள் இருவர் வெட்டிக்கொலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே பஞ்சாயத்து தலைவர் மகன்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா. இவர் கோ. மருதப்பபுரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரது மகன்கள் துரை என்ற மகராஜன், முத்துபாண்டி.
ராணுவ வீரரான முத்துபாண்டி சில தினங்களுக்கு முன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு அவர் தனது அண்ணன் மகராஜனுடன் நவநீதிகிருஷ்ணபுரத்தை அடுத்துள்ள ராமநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 10-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக வந்து திடீரென இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் முத்துபாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த மகராஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் எஸ்பி விஜேயந்திர பிதாரி, டிஎஸ்பி மதிவாணன், சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நிலததகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.