கட்டப் பஞ்சாயத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள்?-ராம கோபாலன் மறுப்பு
நிருபர்களிடம் அவர் பேசுகையில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நகைகள், கோவிலுக்கே சொந்தம் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளதை இந்து முன்னணி பாராட்டுகிறது. கோவில் சொத்துக்களை விற்று எதுவும் செய்ய கூடாது. புராதானமிக்க விலையே மதிக்க முடியாத அந்த நகைகளை கோவில் சொத்தாகவே வைத்து பராமரிக்க வேண்டும்.
சென்னை ராணுவ முகாமில் சிறுவன் சுடப்பட்டது கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு அளித்ததும், வழக்கை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைத்ததும் பாராட்டத்தக்கது.
இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 17ம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. கோவில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரசாரம் செய்வோம்.
சாயக் கழிவு நீர் பிரச்சனையில் கழிவுநீர் சுத்திகரிப்பை அரசே மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பரப்பப்படும் தகவல்கள் தவறானவை. அது உண்மை என்றால் அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.