உள்ளாட்சி தேர்தல் தனித்துப் போட்டியிடுவோம்: இளைஞர் காங். தலைவர் யுவராஜா
கும்பகோணம்: தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் இளைஞர் காங்கிரசாரிம் இருந்து விருப்ப மனுக்களை பெறும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் (ஹரியானா) மாநில பொதுச் செயலாளர் கௌரவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விரைவில் உள்ளாட்சி தேர்தல் வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளோம்.
ராகுல் காந்தி உத்தரவின்படி கடந்த 28-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இது வரை 167 சட்டசபை தொகுதிகளில் 3 ஆயிரத்து 700 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வரும் 8-ம்தேதி வரை மீதம் உள்ள தொகுதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்படும்.
10 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றது. இந்த சுற்றுப்பயணத்தின் போது சட்டசபை தேர்தல் தோல்வி குறித்தும், வருங்காலத்தில் கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது குறித்தும், உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும் கருத்துகள் கேட்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் தோல்வி அடைந்தது.
அதற்கு காரணம் திமுகவிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியால் தான் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என்றார்.