இன்று முதல் சென்னைக்கு வரும் வீராணம் குடிநீர்: சோதனை அடிப்படையில் வரும்
சென்னை: இன்று முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திறந்துவிடப்படுகிறது. இன்று சோதனை அடிப்படையில் முதலில் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னையை சென்றடையும்.
வீராணம் ஏரியில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததால் அங்கு தண்ணீர் தேக்கப்படவல்லை. இதனால் கடந்த 4 மாத காலமாக அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கமுடியவில்லை.
மேட்டூர் அணை திறந்ததையடுத்து வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வரத் துவங்கியதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் உயரம் 15.60 அடி, மொத்த கொள்ளளவு ஆயிரத்து 465 மில்லியன் கன அடி. நேற்று காலை நிலவரப்படி 11.1 அடியாகவும், தண்ணீர் இருப்பு 507 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் சென்னைக்கு மீண்டும் குடிநீர் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து குடிநீர் குழாய்கள் சுத்தப்படுத்தப்பட்டது. இன்று முதல் சென்னைக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இன்று சோதனை அடிப்படையில் முதலில் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டும் வழங்கப்படுகிறது.
தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாத வகையில் சென்னைக்கு வழங்க்ப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் முழு அளவான 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.