நிலமோசடி- கொடைக்கானல் நகரசபை திமுக தலைவர் கைது
கொடைக்கானல்: நிலமோசடி செய்தவர்களுக்கு துணைபோன கொடைக்கானல் நகரசபை திமுக தலைவர் முகமது இபுராகிம் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சிவனடி ரோட்டைச் சேர்ந்தவர் சேவியர் மைக்கேல். இவரது மகன் ஜான் ரோசர். இவர்களுக்கு அப்பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலையில் ஜான் ரோசர் சென்னையில் உள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி சென்னையைச் சேர்ந்த உத்தம்சன் சல்லடா, திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழில் அதிபர் பழனிச்சாமி ஆகியோர் எங்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டனர். மேலும், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, வெத்து தாள்களில் கையெழுத்து வாங்கினர். பின்னர் எங்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு அதை இடித்துத் தள்ளினர்.
இதற்கு சென்னையைச் சேர்ந்த ரூபன், கொடைக்கானல் நகரசபை தலைவர் முகமது இபுராகிம், நில புரோக்கர்கள் துலிப் சிங், சேகர் செபாஸ்டியான் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சிவக்குமார் ரோசர் புகார் குறித்து விசாரித்து நிலத்தின் ஆவணங்களை கைபற்றினார். கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இந்த நில மோசடி தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொடைக்கானல் நகரசபை திமுக தலைவர் முகமது இபுராகிம், நில புரோக்கர்கள் துலிப்சிங், சேகர் செபாஸ்டியான் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு மாஜிஸ்திரேட் மூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் அந்த 3 பேருக்கும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யவும், சிறையில் முதல் வகுப்பு வழங்கவும், 3 பேரையும் வருகிற 27-ம் தேதி வரை காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் 3 பேரையும் மதுரை சிறையில் அடைத்தனர்.