ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரத்தை மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களை கேட்பவர்களுக்கு தகவல் வழங்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னையைச் சேர்ந்த சமூகசேவகர் மாதவன் மாநில தகவல் ஆணையத்தின் ஒரு உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பல்வேறு தகவல்களை பெற்று வருகிறேன். இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து தகவல் கேட்டால், அவர்களின் தனிப்பட்ட விஷயம் பாதிக்கப்படுவதாக கூறி பொது தகவல் அதிகாரிகளும் மாநில தகவல் ஆணையமும் தகவல் வழங்க மறுக்கிறது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவிக்கிறார்கள். அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும் அரசு பணி செய்வதால் மக்களின் சேவகர்கள்தான். அவர்களின் சொத்துவிவரங்களை அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களை வழங்குவதற்கு மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
தகவல் ஆணையத்திற்கு உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லையென்றாலும் மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெறுவதால் மக்களின் சேவகர்கள்தான். அவர்களின் சொத்து விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள முழு உரிமை உள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அரசுக்கு தெரிவிக்கிறார்கள்.
அரசிடம் தெரிவிக்கும் விவரங்களை வெளியே தெரிவிப்பதால் அதில் ரகசியம் ஒன்றும் இல்லை. எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களையும் வழங்க வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையத்திற்கும் பொதுத்துறை செயலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது," என அறிவித்தனர்.