இலாகா மாற்றத்தால் அதிருப்தி அடைந்த அமைச்சர் குருதாஸ் காமத் ராஜினாமா
டெல்லி: இலாகா மாற்றத்தால் அதிருப்தி அடைந்த மத்திய இணை அமைச்சர் குருதாஸ் காமத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேசமயம், தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்ந்து விசுவசாமாக இருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது இலாகா குறித்து இரண்டு அமைச்சர்கள் அதிருப்தி அடைந்தனர். இணை அமைச்சர்களான குருதாஸ் காமத்தும், ஸ்ரீகாந்த் ஜெனாவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய இலாகாக்கள் குறித்து அதிருப்தி அடைந்து பதவியேற்பு விழாவுக்கு வராமல் புறக்கணித்தனர்.
இந்த நிலையி்ல அவர்களில் குருதாஸ் காமத் பதவி விலகியுள்ளார். இவருக்கு நேற்றைய இலாகா மாற்றத்தில் தனிப்பொறுப்புடன் கூடிய குடிநீர் மற்றும் துப்புறவுத்துறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இதை அவர் விரும்பவில்லையாம். மும்பை வட மேற்கு தொகுதி எம்.பியான இவர் இதுகுறித்து கூறுகையில்,
எனது ராஜினாமா கடிதத்தை நான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். இருப்பினும் நான் உண்மையான காங்கிரஸ் ஊழியராக தொடர்ந்து செயல்படுவேன். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக நான் செயல்படவில்லை. எனது தனிப்பட்ட முடிவுதான் இந்த ராஜினாமா.
இலாகா பிடிக்கவில்லை என்று கூறி நான் ராஜினாமா செய்யவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாவும் சாதாரணமானதில்லை, நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான துறைதான். எனவே நான் இலாகா பிடிக்காமல் விலகவில்லை.
எனவே எனது விலகலுக்கான காரணம் தனிப்பட்ட முறையிலானது. தொடர்ந்து நான் கட்சித் தலைமைக்கும், சோனியா காந்திக்கும் விசுவாசமாக இருப்பேன். தீவிர காங்கிரஸ் ஊழியராக செயல்படுவேன் என்றார் காமத்.
ஜெனா தொடர்ந்து அமைதி
இதற்கிடையே, தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பதவி உயர்த்தப்பட்ட ஸ்ரீகாந்த் ஜெனா தொடர்ந்து அமைதியாக இருந்து வருகிறார். தனது புதிய பொறுப்பை அவர் ஏற்பாரா அல்லது காமத் போல இவரும் பதவி விலகுவாரா என்பது தெரியவில்லை. இருப்பினும் யாருடைய அதிருப்தியையும் பொருட்படுத்தப் போவதில்லை என்று காங்கிரஸ் மற்றும் பிரதமர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.