வேளாண் வங்கியில் கொள்ளை முயற்சி: ரூ. 12 கோடி நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் தப்பியது
நாங்குநேரி: நாங்குநேரி அருகே உள்ள வேளாண் வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திருடர்கள் முயன்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.12 கோடி மதிப்புள்ள நகை மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம் தப்பியது.
நாங்குநேரி அருகே உள்ளது பரப்பாடி. ஊருக்கு தென்பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், அதையொட்டி ரேஷன் கடையும் உள்ளது. இந்த வங்கியின் காவலாளியாக இலந்தை குளத்தைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த தங்கபாண்டி நேற்று அதிகாலை 2 மணிககு மாடியில் உள்ள அறையில் தூங்கச் சென்றார். அப்போது மர்ம நபர்கள் வங்கியின் பின்பக்க சுவரை கடப்பாரையால் உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் அந்த சுவர் ரேஷன் கடைக்கு சொந்தமானதாகும். அங்கு அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் கொள்ளையர்கள் அந்த முயற்சியை கைவிட்டு முன்பக்கம் வந்து கிரில் கேட்டை உடைத்தனர். அதன்பிறகு வங்கியின் மெயின் கதவு, அதையொட்டியுள்ள மற்றொரு அறை கதவு ஆகியவற்றை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பணம் வைத்திருந்த லாக்கரை அவர்கள் கடப்பாறையால் உடைக்க முயற்சித்தனர். ஆனால் உடைக்க முடியவில்லை. இதனால் லாக்கரில் இருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள நகை மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கம் தப்பியது. இதற்கிடையே மாடி அறையில் தூங்கிய காவலாளி தங்கபாண்டியன் சத்தம் கேட்டு கீழே வந்தார். அவர் வருவதை பார்த்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
வங்கிக் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே செயலாளர் வில்சனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பிறகு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. நாங்குநேரி டிஎஸ்பி கோவிந்தராஜ், விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வங்கியில் இருந்து ஒரு டேபிள் பேன் மட்டும் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.