கோவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் கொடூரக் கொலை
கோவை: கோவையில், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.
பெரியகுளம், தென்கரை சப்பாணி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 55 வயதாகும் இவர் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். கோவையில், பீளமேடு பாரதி காலனி பகுதியில் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
சுதந்திர தினத்தையொட்டி வந்த விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கழிக்க குடும்பத்தோடு போயிருந்தார் சத்தியமூர்த்தி. நேற்று அதிகாலையில் ஊருக்கு வந்தார். பின்னர் பீளமேடு சென்ற அவர் அலுவகலத்தைத் திறந்து உள்ளே போனார். அப்போது பின்னால் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பின் பகுதிக்குச் சென்றார். அப்போது கட்டடத்தின் உள்ளே சிலர் பொருட்களைத் திருடிக் கொண்டிருந்தனர். சத்தியமூர்த்தியைப் பார்த்து திடுக்கிட்ட அவர்கள் படு வேகமாக கீழே கிடந்த போர்வையை எடுத்து அவரது முகத்தில் மூடினர். பின்னர் சரமாரியாக தங்களது கையில் இருந்த ஆயுதங்களால் வெறி கொண்டு தாக்கினர். இதில் நிலை குலைந்த சத்தியமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
கொள்ளையர்கள், சத்தியமூர்த்தியின் கழுத்தையும் அறுத்து கோரமாக கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் காலை ஒன்பதே கால் மணியளவில் அலுவலகத்திற்கு வந்த டிரைவர் விக்னேஷ் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே போனபோது கொலை மற்றும் கொள்ளை நடந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டு அலறினார். நிறுவன உரிமையாளர் சசிக்குமார், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
சத்தியமூர்த்திக்கு மனைவி, இருமகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் கல்யாணம் நடந்தது. 2வது மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த கொடூரக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.