தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான 3 தமிழ்ப்புலிகள் விடுவிப்பு
மதுரை: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த 3 பேரை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விடுவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்ப்புலிகள் அமைப்பு தலைவர் நாகை திருவள்ளுவனின் கார் மீது விருதுநகர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, அரசுக்கு சொந்தமான பஸ்சை தீ வைத்து எரித்ததாக தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த முத்துப்பாண்டி, சவுந்தரபாண்டி, மூக்கையா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த முத்துப்பாண்டி, சவுந்தரபாண்டி, மூக்கையா ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் தமிழ்ப்புலிகள் அமைப்பை சேர்ந்த முத்துப்பாண்டி, சவுந்தரபாண்டி, மூக்கையா ஆகியோர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.