டிடிஎச் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது! - கேபிள் ஆபரேட்டர் சங்கம்
சென்னை: அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தொடங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அதே நேரம் டிடிஎச் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் வெளிக் கொணரப்படுவது அளவிலா ஆனந்தத்தை தருகிறது. பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி.யை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முதல்வரின் முயற்சி பாராட்டுக்குரியது, வரவேற்கத்தக்கது.
இந்த மகிழ்ச்சிக்குரிய நேரத்தில் சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம். கட்டண சேனல்கள் நீங்கலாக டிராய் பரிந்துரைத்துள்ள மாதக் கட்டணம் ரூ. 77 வசூலிக்க அரசு ஆவண செய்து தர வேண்டுகிறோம். பராமரிப்பு செலவு, பணியாளர்கள் சம்பளம் மற்றும் இத்தியாதிய செலவுகளுக்கு உட்பட முதல் எழு என்ற எழுபது ரூபாய்களை கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கும், அடுத்த 7 ரூபாய் அரசுக்குமாக நிர்ணயம் செய்து தர வேண்டுகிறோம்.
சுமார் 1.45 கோடி இணைப்புகள் உள்ளதாக அரசு தரும் தகவல் மூலம் நாங்கள் வேண்டுகின்ற கோரிக்கை ஏற்கப்படுமானால் அரசுக்கு மாதம் ரூ. 10 கோடிக்கு மேல் வருமானம் வர வாய்ப்புள்ளது.
கட்டண சேனல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற எங்கள் நீண்ட கால கோரிக்கை புதிய பரிமாணம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கேபிள் டி.வி. தொழிலை அழிக்க டி.டி.எச். தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட திட்டம் வகுக்கப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.
கேபிள் டி.வி. இன்றைக்கு அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. டி.டி.எச். என்பது ஆடம்பர பொருளாக உள்ளது. ஆடம்பர பொருளான டி.டி.எச்.க்கு மாகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போடப்படுவது போல கேளிக்கை வரி விதிக்க வேண்டும் என்று அரசை வேண்டுகிறோம்.
டி.டி.எச். தொழிலுக்கு போட்டியாக விளங்கும் உள்ளூர் சேனல்களை நடத்தி வந்த கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கு மீண்டும் தொழில் தொடர முன்னுரிமை வழங்க வேண்டுகிறோம். அரசு நிறுவனமான எல்காட் மூலம் கேபிள் டி.வி. உபகரணங்களை மானிய விலையில் கேபிள் டி.வி. தொழில் புரிவோருக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.