மதுரையில் விவசாயிகளின் உணவு திருவிழா - கலெக்டர் சகாயம்
மதுரை: விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் மதுரையில் விவசாயிகளின் உணவு திருவிழா நடைபெறும் என மாவட்ட கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். விளை பொருட்களை தாங்களே மதிப்பு கூட்டுதல் செய்து விற்பனையாளராக மாறினால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
இதனால், விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். சோளம், கம்பு, திணை, ராகி, வரகு போன்ற தானியங்கள், தயிர், மோர், மற்றும் பால்கோவா போன்றவற்றை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
இதன்படி விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தும் முதற்கட்டமாக மதுரை மாநகர் மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரம், ராமகிருஷ்ணமடம் அருகில் உள்ள சுய உதவிகுழு பயிற்சி மைய பொன்விழா கட்டிட வளாகத்தில் பாரம்பரிய சிறுதானிய விவசாயிகளின் உணவு திருவிழா நடைபெறும்.
மேலும் உழவன் உணவகம் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் ஆயிரம் விவசாயிகளுக்கு சிறுதானிய உணவு பொருள்களை மதிப்பு கூட்டுதல் செய்ய விளக்க பயிற்சியை தேசிய தோட்ட களை இயக்கம் அளிக்க உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.