எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை, முறைகேடாக சம்பளம் வாங்கவில்லை- அரவிந்த் கேஜ்ரிவால்
அன்னா ஹஸாரே குழுவினர் மீது அவதூறுகைளை சுமத்த மத்திய அரசு முயன்று வருவதாக அவரது குழுவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வருமான வரித்துறை ஒரு குற்றம் சாட்டியுள்ளது.
அரவிந்த் வருமான வரித்துறையில் உதவி ஆணையராக இருந்தவர். அவர் 2000மாவது ஆண்டு விடுமுறையில் சென்றதாகவும், அதன் பின்னர் பணிக்கே வரவில்லை என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது. அதேசமயம், இன்று அவர் பணியில் நீடிப்பதாகவும், சம்பளம் வாங்கி வருவதாகவும் அது கூறியுள்ளது. அந்த வகையில் ரூ. 9 லட்சம் வரை கேஜ்ரிவால் பெற்றிருப்பதாக கூறியுள்ள வருமான வரித்துறை அதை அவர் திரும்பித் தர வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதை கேஜ்ரிவால் முழுமையாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எந்த விதியையும் மீறவில்லை. எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. மோசடியாக சம்பளம் வாங்கவும் இல்லை. நான் 2006மாவது ஆண்டிலேயே ராஜிநாமா செய்து விட்டேன்.
நான் ஸ்டடி விடுமுறையில் போகும்போது ராஜினாமா செய்யக் கூடாது என்பது விதியாகும். அதேபோல நான் ஸ்டடி லீவில் போனபோது ராஜினாமா செய்யவில்லை. ஸட்டி விடுமுறை முடிந்த பின்னர் பணியில் சேர்ந்தேன். அதன் பின்னர்தான் நான் ராஜினாமா செய்தேன். எனது ராஜினாமாவை அவர்கள் ஏற்கவில்லை. அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
இப்போது திடீரென இந்தப் பிரச்சினையை எழுப்புவதற்கான அவசியம் என்ன என்பதுதான் புரியவில்லை என்றார் கேஜ்ரிவால்.