பேரறிவாளன், முருகன், சாந்தன் குறித்து ஆளுநர் ரோசய்யாவிடம் பேசவில்லை-கருணாநிதி
சென்னை: தமிழக ஆளுநராகப் பதவியேற்றுள்ள கே.ரோசய்யாவை, திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் விவகாரம் குறித்துத் தான் பேசவில்லை என்று கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக ஆளுநராக சமீபத்தில் கே.ரோசய்யா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று திடீரென திமுக தலைவர் கருணாநிதி ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் க.அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ரோசய்யா எனது பழைய நண்பர். நீண்ட கால நட்பு கொண்டவர்கள். அந்த வகையில் தான் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறினார்.
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை குறித்துப் பேசினீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்றார் கருணாநிதி. வேறு என்ன பேசினீர்கள் என்று கேட்டபோது எதுகுறித்தும் பேசவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே இது என்றார் கருணாநிதி.
தமிழகத்தில் திமுகவினர் மீது சரமாரியாக நில அபகரிப்பு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின்போது கேபிள் டிவியை நாட்டுடமையாக்க ஜெயலலிதா முயற்சித்தார். மேலும் சன் டிவியை கையகப்படுத்தும் நடவடிக்கையிலும் அவர் இறங்க தீர்மானித்திருந்தார். இதையடுத்து தயாநிதி மாறனுடன் அப்போதைய ஆளுநர் பர்னாலாவை அவசரம் அவசரமாக சந்தித்து ஜெயலலிதாவின் நடவடிக்கையை தடுக்க முயற்சித்தார் கருணாநிதி என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அரசு கேபிள் டிவியை இன்று ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார்.
இந்தப் பின்னணியில் ஆளுநரை திடீரென கருணாநிதி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.