அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து ராஜினாமா- திமுக கவுன்சிலர்கள் அறிவிப்பு
கரூர்: கரூர் நகராட்சி செயல்பாட்டில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலையிடுவதாக கூறி அவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தள்ளனர்.
கரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் பெத்தாச்சி மண்டபத்தில் நகர்மன்ற தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை தலைவர் எஸ்.பி. கனராஜ் , திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள் என மொத்தம் 36 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கும் என்று கூறிவிட்டு தாமதமாக தொடங்கியதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கூட்டம் துவங்கிய போது திமுக கவுன்சிலர் மணிராஜ் பேசும் போது, கரூரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது, பொது மக்களுக்கு போதிய மருத்துவ மனை வசதி இல்லை, சாக்கடை 20 நாட்ளாகியும் சுத்தம் செய்யாமல் உள்ளது , குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் வினியோகம் செய்யப்படுகின்றது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், கரூர் நகர் மன்ற தலைவர் சிவகாம சுந்தரியும், பெரும்பாலான கவுன்சிலர்களும் திமுக -வினர் என்பதால் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலின் பெயரால் அதிகாரிகள் பணி செய்யாமல் உள்ளனர்.
இதனைக் கண்டித்து நாங்கள் எங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறி விட்டு கூட்ட அரங்கத்தை விட்டு வெளி நடப்பு செய்தனர்.
ஆனால், திமுக கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை பதில் அளிக்கவில்லை.