டெல்லி குண்டுவெடிப்பில் இறந்த தூத்துக்குடி துறைமுக அதிகாரி உடல் தகனம்: ரூ. 4 லட்சம் நிதியுதவி
ஸ்ரீவைகுண்டம்: டெல்லி குண்டுவெடிப்பில் உயிரிழந்த தூத்துக்குடி துறைமுக அதிகாரி பத்திரனின் உடல் ஸ்ரீவைகுண்டம் அருகே நேற்று தகனம் செய்யப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் வெளியே நடந்த குண்டு வெடிப்பில் 13 பேர் பலியாயினர். 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்ற தூத்துக்குடி வஉசி துறைமுக மேற்பார்வை பொறியாளர் பத்திரனும் இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் டெல்லியிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்சில் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது மனைவி வடிவுராணி, மகள் பவித்ராவிசு, மகன் சந்தோஷ் ஆகியோர் அவரது உடலை பார்த்து கதறியழுதனர்.
தூத்துக்குடி துறைமுகம் சேர்மன் சுப்பையா, துறைமுக ஆலோசனை குழு உறுப்பினர் பெரியசாமி, விஜயசீலன் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது மனைவியிடம் ஆறுதல் கூறி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை துறைமுக சேர்மன் சுப்பையா வழங்கினார். தொடர்ந்து பத்திரனின் உடல் ஆழ்வார்கற்குளம் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.