கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தீர்மானம்: அரசுக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை
வள்ளியூர்: கூடன்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என போராட்டக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து கூடன்குளம் போராட்டகுழு அமைப்பாளர் உதயகுமார் கூறியதாவது,
கூடன்குளத்தில் அணு உலை அமைக்கப்பட்டு வருவதை எதிர்த்து பொதுமக்களை திரட்டி அஹிம்சை முறையில் போராடி வருகிறோம். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த போராட்டக் குழுவின் ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலைக் கைவிடச் செய்தோம்.
இந்த போராட்டம் குறித்து சட்டசபையில் பேச ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகிய இருவரும் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீதிக்காக போராடும் மக்களை தமிழக அரசு வாட்டி வதைப்பது நல்லதல்ல. எங்களுடைய வாழ்வுரிமையையும், வாழ்வாதாரத்தையும் மதித்து மாநில அரசு கூடன்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.