தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு- அரசாணை பிறப்பிப்பு
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதைப் போலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகாததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர். பல்வேறு தகவல்களும் உலா வர ஆரம்பித்தன.
இந்த நிலையில் தமிழக அரசும் 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அளிக்க முடிவு செய்தது. தற்போது இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் 15-ம் தேதி உத்தரவு வெளியானது. இதைத் தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும் அதே அளவுக்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 51 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டு 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு முன்தேதியிட்டு அதாவது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு உரிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக ரொக்கமாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 13 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தது ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 2500 வரை ஊதியம் உயரும்.