போட்டியிலிருந்து விலகச் சொன்னதால் அதிமுக பெண் வேட்பாளர் தீக்குளித்து மரணம்
கிருஷ்ணகிரி: வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என்று வந்த மிரட்டலை அடுத்து அதிமுக பெண் வேட்பாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஆனந்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சவுந்தர்யா (28) இவர் அ.தி.மு.க. இளம் பெண்கள் பாசறை கிளை செயலாளராக பணியாற்றியவர்.
சவுந்தர்யா ஆனந்தூர் ஊராட்சி 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது உறவினரான மூக்கம்மாளும் இதே வார்டில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், மனுவை வாபஸ் பெறுமாறு சவுந்தர்யாவிடம் மூக்கம்மாள் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால், இதற்கு சவுந்தர்யா மறுக்கவே மூக்கம்மாள், அவரது உறவினர்கள் ஆண்டி (எ) முருகன், ரஞ்சித், ரமேஷ் ஆகியோர் சவுந்தர்யாவை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளனர்.
இதனால், மனமுடைந்த சவுந்தர்யா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அருகில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் கிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குப் பதிந்து வேட்பாளர் சவுந்தர்யாவை
மிரட்டிய ஆண்டி(எ) முருகன், ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவு வேட்பாளர் மூக்கம்மாள் மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
அ.தி.மு.க. பெண் வேட்பாளர் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. வேட்பாளர் கடத்தல்
இதற்கிடையே, அறந்தாங்கி அருகே தி.மு.க. வேட்பாளரை அ.தி.மு.க. வேட்பாளர் காரில் கடத்திச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 14வது வார்டு மஞ்சக்குடி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் குணசேகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் கார்த்திகேயன் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் என்பதால் விண்ணப்பித்த அனைவரும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நின்றிருந்தனர். அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வந்த தி.மு.க. வேட்பாளர் குணசேகரனை, அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றாக கூறப்படுகின்றது.
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவ குணசேகரனை மீட்டு தர வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பி வந்த தி.மு.க. வேட்பாளர் குணசேகரன், தன்னை அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் கடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.