சரஸ்வதி பூஜை, விஜயதசமியால் பூக்கள் விலை கிடு கிடு
தமிழகத்தில் உள்ள முக்கிய பூ மார்க்கெட்டில் தோவாளையும் ஒன்று. இங்கிருந்து பிச்சிப் பூ, மல்லிகை, மரிக்கொழுந்து, அரளி, துளசி, கிரேந்தி, வாடாமல்லி, கோழிக் கொண்டை கனகம்பரம், முல்லை ஆகிய பூக்கள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கம், கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
நவராத்திரி பண்டிகை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக பூக்களின் விலை சற்று அதிகரித்திருந்தது. இந்நிலையில் நேற்று பூக்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்ற பிச்சிப் பூ தற்போது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.200க்கு விற்ற மல்லிகைப் பூ ரூ.400 ஆகவும், ரூ.20க்கு விற்ற அரளி ரூ.80 ஆகவும், ரூ.30க்கு விற்ற சம்பங்கி ரூ.100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
வரும் 5, 6 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர்.