மணல் கொள்ளை- தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.பழனிசாமிக்கு சிறைக் காவல் நீடிப்பு
கரூர்: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி எம்.எல்.ஏ.வுக்கு மாயனூர் மணல் கொள்ளை வழக்கில் 15 நாள் சிறைக் காவலை நீட்டித்து குளித்தலை நீதிபதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ள கே.சி.பழனிசாமி மீது அனுமதியின்றி மணல் எடுத்ததாக மாயனூர் கிராம அலுவலர் நீலமேகம் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் கடந்த மாதம் 19 ம் தேதி வழக்கு பதிந்து கைது செய்தனர்.
குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கே.சி.பழனிசாமி-யை நீதிமன்ற காவலில் எடுக்க குளித்தலை மாஜிஸ்திரேட் கோர்ட், கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் போலீஸ் காவலில் எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல, கே.சி.பழனிசாமி -க்கு ஜாமீன் கோரி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் மாயனூர் வழக்கில் 15 நாள் காவல் நேற்று முடிவடைந்ததை அடுத்து, குளித்தலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி. பழனிசாமியின் வயதை கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அவரது சார்பில் கோரப்பட்டது.
இந்நிலையில், குளித்தலை மாஜிஸ்திரேட் எண் 2 நீதிபதி தனசேகரன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் கே.சி.பழனிசாமியின் காவலை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.