கடையநல்லூரில் காங். நிர்வாகிகள் மீது தொண்டர்கள் கோபம்
கடையநல்லூர்: கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு காங்கிரசார் முழு ஈடுபாட்டுடன் தேர்தல் பணி ஆற்றாமல் சம்பிரதாயத்திற்காக பணி மேற்கொள்வதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வேட்பாளரை கட்சி முக்கிய நிர்வாகிகள் கடைசி நேரத்தில் வாபஸ் பெற வலியுறுத்தியதால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சியை காங்கிரஸ் 2 முறை கைப்பற்றியது. காங்கிரஸில் இருந்து பிரிந்து த.மா.கா ஒருமுறை கைப்பற்றியது. கடந்த 2001-ம் ஆண்டு த.மா.கா.வைச் சேர்ந்த தாயம்மாள் அதி்முக ஆதரவோடு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 250 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இப்ராஹீம் நகர்மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காளிராஜ் தேர்வானார். இவ்வாறு தன் கோட்டையிலேயே காங்கிரஸ் கடைசி நேரம் வரை வேட்பாளரை அறிவிக்காமல் ரகசியம் காத்தது. ஒரு வழியாக யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கணேசன் என்பவரின் மனைவி சந்திராவை வேட்பாளராக அறிவித்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லை. சம்பிரதாயத்திற்காகத் தான் வேட்பாளரை தலைமை அறிவித்துள்ளது. எனவே, போட்டியில் நிற்க வேண்டாம் என காங்கிரஸ் நகர நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அத்துடன் போட்டியில் இருந்து வாபஸ் பெரும் வகையில் வேட்புமனுவை திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை புறக்கணித்து தொண்டர்கள் வேட்பாளருடன் தீவிர தேர்தல் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.