Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

என் மகளுக்கு எந்த அரசியல்வாதியும் உதவக் கூடாது- முத்துலட்சுமி வேண்டுகோள்

Posted by:
Published: Tuesday, October 4, 2011, 14:55 [IST]

No One Should Help My Daughter Vidhya Rani Muthulakshmi Aid0091

சேலம்: எனது மகள் வித்யா ராணிக்கு, எனது கணவர் வீரப்பன் பெயரைச் சொல்லக் கூட தகுதி இல்லை. எனது கணவர் பெயரைச் சொல்லி அவர் யாரிடமும் உதவி கோரக் கூடாது, யாரும் வித்யா ராணிக்கு உதவாதீர்கள் என்று கூறியுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.

வீரப்பன்-முத்துலட்சுமி தம்பதியின் மூத்த மகள் வித்யாராணி. இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மரிய தீபக் என்பவரை மணந்தார். பின்னர் குடும்பமும் நடத்தி வந்தார். இதைக் கேள்விப்பட்டு அதிர்ந்த முத்துலட்சுமி தனது மகளை வீட்டோடு சிறை வைத்தார்.

இதையடுத்து மரிய தீபக் ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வித்யா ராணியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. அதன்படி வித்யாராணியை போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், வித்யா ராணி மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி வாழலாம் என்று கூறி விட்டது கோர்ட். இதையடுத்து தனது கணவருடன் போய் விட்டார் வித்யாராணி.

இந்த நிலையில் முத்துலட்சுமி இன்று செய்தியாளர்களை சேலத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

என் மூத்த மகள் வித்யாராணியின் திருமண வாழ்க்கைக்கு எதிராக நான் இருப்பது போன்ற செய்திகளை என் மகள் வித்யாராணியும், மரிய தீபக்கும் கூறி வருவது உண்மைக்குப் புறம்பானது. எனக்கு மன வேதனையை அளிப்பதும் ஆகும்.

உண்மை என்னவெனில் எனது மகள் வித்யாராணி சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்துவ கல்லூரியில் படித்து வருகிறார். நான் சிறையில் இருந்த காலக்கட்டத்தில் எனது மகள் படிப்பிற்கு சில பெரிய மனிதர்கள் உதவி செய்து வந்தார்கள். அங்கு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மரிய தீபக் என்பவருடன் வித்யாராணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நண்பராக பழகிய மரிய தீபக் வித்யாராணியின் படிப்பு செலவிற்கு கொடுத்த பணத்தை பெற்று ஊதாரித்தனமாக செலவழித்துள்ளார். இதற்கு ஆதாரமாக என் மகளின் பேங்க் பாஸ்புக் உள்ளது. மேலும் நான் கர்நாடகா சிறையில் இருந்த அந்த சமயத்தில் எனது வழக்கு செலவிற்கு என்று கூறி சில பிரமுகர்களிடம் வித்யா ராணியை அனுப்பி பணத்தை வாங்கி கொடுக்கச் சொல்லி மரிய தீபக் செலவழித்துள்ளார்.

வித்யாராணியும், மரிய தீபக்கும் திருமணம் செய்து கொள்வதற்கு முன் வித்யாராணி எங்கள் வீட்டில் இருந்து எடுத்துச்சென்ற நகைகளையும், மரிய தீபக் திருமணத்திற்கு பின் விற்று செலவழித்துள்ளார். எந்த ஒரு வேலையையும் செய்யாமல் வித்யாராணியிடம் இருந்து பெற்ற பணத்தை கொண்டே செலவழித்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாத கடைசியில் கையில் பணம் ஏதும் இல்லாத சூழ்நிலையில் எனது மகள் வித்யாராணி என்னை காண வந்தார். ஒரு தாய் என்ற முறையில் எனது மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு எனது மகள் வித்யாராணியிடம் நீ கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து கல்லூரி படிப்பை முடி என்றும், அதற்குள் மரிய தீபக் ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ளட்டும் என்றும் அறிவுரை கூறினேன்.

எனது மகள் என்னை காண வந்த சமயத்தில் மரிய தீபக் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது உள்நோக்கம் கொண்டது. உண்மையிலேயே மரிய தீபக் நல்ல கணவரென்றால் ஒரு நல்ல வேலையை தேடிக்கொண்டு சுயமாக சம்பாதித்து மனைவியை காப்பாற்றும் கணவராக இருக்க வேண்டும். நான் எந்த விதத்திலும் எனது மகளை கட்டாயப்படுத்தி வீட்டில் இருக்க சொல்லவில்லை.

எனது மகள் மேஜரான பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கையை பற்றிய புரிதலோ, பக்குவமோ, இல்லாமல் இருக்கிறாள். என்னை காண வீட்டிற்கு வந்தபோது தனது கஷ்டங்களை என்னிடம் கூறியவள், பிறகு கோர்ட்டில் சென்று வேறு மாதிரி பேசுகிறாள்.

எனது மகள் அவளது வாழ்க்கையை அவளே அமைத்துக்கொண்டாள். அவள் வாழ்க்கை சரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் சில பெரிய மனிதர்களின் தூண்டுதலின் பேரில் எனது கணவரின் நற்பெயரை கெடுப்பதற்காக சில அரசியல் சமூக ஆர்வலர்கள் எடுத்த முயற்சியாகும்.

என் கணவரின் பெயரை வைத்துக்கொண்டு சமூகத்தில் உள்ள சில நல்ல தமிழ் உள்ளம் படைத்த மனிதர்களிடம் பணம் கேட்டு படிப்பிற்காக வேண்டும் என்று பணத்தை பெற்று வருகிறார்கள். குறுகிய காலத்தில் இவர்களின் பின்னணி தலைவர்களின் பெயர்கள் வெளியே தெரியவரும்.

இனி வருங்காலங்களில் எனது கணவரின் பெயரை பயன்படுத்தி யாரிடமும் பணம் கேட்க கூடாது என்று உறுதியாகவும், இறுதியாகவும் கூறிக்கொள்கிறேன். யாரும் எனது மகளுக்கு உதவ வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் முத்துலட்சுமி.

English summary
Veerappan's wife Muthulakshmi has urged the politicians and others not to help her daughter Vidhyarani, who recently married Chennai boy Maria Deepak. Muthulakshmi did not recognise this love marriage.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
ENG Vs NZ - 2nd Test at Headingley Fri 24th May Test
Indian Premier League 2013 - 3rd Preliminary Final at Eden Gardens Fri 24th May IPL
Indian Premier League 2013 - Final at Eden Gardens Sun 26th May IPL