வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், மைபேனா, உணவு பொட்டடலம், தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
நெல்லை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன், மை பேனா எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடந்தது. தேர்தல் முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போன், மை பேனா, உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட வேறு எந்த பொருட்களையும் எடுத்துச் கொண்டு செல்ல முகவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்யுமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை குறித்துக் கொள்ள பால் பாயிண்ட் பேனா, பென்சில் மற்றும் வெள்ளை தாள் எடுத்துச் செல்லலாம். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முறையை கேரள தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகளை கேரள மாநில தேர்தல் அதிகாரிகள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
நேற்று தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. குமரி மாவட்டத்தில் நடந்த வாக்குப்பதிவை கேரள மாநில தேர்தல் ஆணைய கூடுதல் செயலாளர்கள் உன்னிகிருஷ்ண நாயர் மற்றும் தேர்தல் ஆணைய பிரிவு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த குழுவினர் நாகர்கோவில் நகராட்சிக்கு வாக்குப்பதிவு நடந்த வெட்டூர்ணிமடம் ரட்சனைய சேனை மேல்நிலைப்பள்ளியில் உள்ள 3 வாக்குச்சாவடிகளையும், வேட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 6 வாக்குச்சாவடிகளையும் பார்வையிட்டனர். அங்கு பூத் சிலிப் வழங்குதல், வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள், வாக்காளர்களை ஒழுங்குபடுத்த நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினரின் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தை பார்வையிட்டு புகார்கள் பதிவு செய்யும் முறை, நடவடிக்கை எடுக்கும் முறை குறித்து கேட்டறிந்தனர். புகார்கள் பெற வைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் தொலைபேசி வசதிகளை பார்வையிட்டனர். வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை அங்கு நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கான வழிமுறைகளை மேம்படுத்திக் கொள்ள இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடத்தப்படும் தேர்தல் முறைகளில் பின்பற்றப்படும் குறிப்பிட்ட சில அம்சங்களை கேரள தேர்தலிலும் பயன்படுத்தும் வகையில் இந்த ஆய்வு இருக்கும் என்றார்.