மேலும் 100 கேள்விகள் பாக்கியிருப்பதால் நாளையும் பெங்களூர் கோர்ட்டில் ஆஐராகிறார் ஜெ.
14 வருடங்களாக பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா ஆஜராகவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து இன்று அவர் முற்பகல் 11 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் 380 கேள்விகளைக் கேட்டு ஜெயலலிதாவிடமிருந்து பதில்களைப் பெற்றுப் பதிவு செய்தனர். பின்னர் ஜெயலலிதா கோர்ட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவர் சென்ற பின்னர் வெளியே வந்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரிடம் நடந்தது என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த குமார், இன்று தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் 380 கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய பதிலை அளித்துள்ளார் முதல்வர்.
மேலும் 100 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட வேண்டும். எனவே நாளையும் அவர் விசாரணைக்கு ஆஜராகிறார். நாளை காலை மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார் என்றார் குமார்.
ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்டு முடிக்கப்பட்ட பின் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களான சசிகலா, இளவரசி உள்ளிட்டோரிடம் கேள்விகளை நீதிமன்றம் கேட்கும் என்று தெரிகிறது.
நாளை மீண்டும் ஆஜராக வேண்டிய ஜெயலலிதா, இன்று மாலை ஜெயலலிதா பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை கிளம்பினார். நாளை அவர் மீண்டும் பெங்களூர் வரவுள்ளார்.