ஜெ.வைக் காண சென்ற அதிமுகவினர் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!
ஓசூர்: முதல்வர் ஜெயலலிதாவைக் காண தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவவட்டங்களிலிருந்து ஏராளமான வாகனங்களில் பெங்களூருக்குப் படையெடுத்த அதிமுகவினரை, கர்நாடக போலீஸார் மாநில எல்லையான அத்திபலேவுடன் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று முதல் முறையாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா கோர்ட்டில் ஆஜரானார். இதை ஏதோ திருவிழா போல மாற்றி விட்டனர் அதிமுகவினர். ஜெயலலிதாவின் கார் சென்ற பாதை முழுவதும் தட்டிகளை வைத்து தடபுடல் செய்திருந்தனர் அதிமுகவினர்.
மேலும் பெங்களூரிலிருந்து பெருமளவிலான அதிமுகவினர் பரப்பன அக்ரஹாராவுக்குத் திரண்டு வந்தனர். இதனால் ஓசூர் சாலையே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. ஏதோ மாநாடு நடப்பது போல பரபரப்பு நிலவியது. ஆனால் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி சிறை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலேயே அத்தனை பேரையும் நிறுத்தி விட்டனர். சிறை வளாகத்திற்குள் பத்திரிக்கையாளர்கள் கூட அனுமதிக்ப்படவில்லை.
இந்த நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கார்கள், டிராக்டர்கள், டூவீலர்கள், வேன்களில் படையெடுத்து கிளம்பினர். ஆனால் இவர்களை ஓசூரை அடுத்துள்ள கர்நாடக மாநில எல்லைப் பகுதியான அத்திபலேவுடன் போலீஸார் தடுத்து நிறுத்தினர். யாரும் உள்ளே வரக் கூடாது, அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸார் கூறி விட்டனர். இதனால் அதிமுகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. ஆனால் போலீஸார் அனுமதிக்க மறுத்து விட்டதால் அதிமுகவினர் பெரும் ஏமாற்றத்துடன் தமிழகப் பகுதிக்குத் திரும்பி அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர்.