வாக்குச்சீட்டு குளறுபடி: சத்திரப்பட்டியில் இன்று மறுவாக்குப் பதிவு
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் அங்கு இன்று மறுவாக்குப் பதிவு நடந்தது.
கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சி 136வது வாக்குச்சாவடியில் 1வது வார்டு மற்றும் 3வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. 3வது வார்டு உறுப்பினர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த வார்டில் உள்ளவர்களுக்கு 3 வாக்குச்சீட்டுகள் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஆனால் அங்குள்ள தேர்தல் அலுவலரின் கவனக்குறைவால் 1வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சீட்டுகளும் சேர்த்து 3வது வார்டு வாக்காளர்களுக்கு மொத்தம் 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் 1வது வார்டுவாக்களர்களின் வாக்குச்சீட்டுகள் குறைந்ததால் குளறுபடி நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சத்திரப்பட்டி 136வது வாக்குச்சாவடியில் 1வது வார்டுக்கு மட்டும் இன்று மறுவாக்குப் பதிவு நடந்தது.