கூடங்குளம் பற்றிய கடிதம் ஜெயலலிதாவுக்கு கிடைக்கவில்லையா? பிரதமர் வருத்தம்
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து தான் எழுதிய கடிதம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிடைக்காமல் போனதற்காக வருந்துவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவி்த்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த 3 நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லி திரும்பினார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ரத யாத்திரை நடத்தி வரும் அத்வானிக்கு எனது வாழ்த்துகள். ஆனால் அவர் ரத யாத்திரையின்போது கடுஞ்சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து கொண்டு, ஒரு தேசிய தலைவரை விமர்சிக்க விரும்பவில்லை. அவருக்கு பிரதமராகும் தகுதி உள்ளதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அன்னா ஹஸாரே இயக்க்கத்தினர் வலியுறுத்திய பலமான லோக்பால் மசோதா உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் இனிவரும் காலங்களில் ஊழலின் பாதிப்பு குறையும். விரைவில் பலமான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு முயன்று வருகிறது.
நமது கோபத்தை காட்ட பல நாகரிமான வழிகள் உள்ள போது, அன்னா ஹஸாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. நமது ஜனநாயகத்தில் வன்முறைக்கே இடமில்லை.
கூட்டணி ஆட்சியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மூலம் அரசே கவிழ்ந்துவிடும் நிலை ஏற்படக்கூடாது. உலக அளவில் பாதகமான பொருளாதார சூழ்நிலை நிலவினாலும், பொருளாதார வளர்ச்சி வீதம் 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான நிபுணர் குழு இன்று அல்லது நாளை அமைக்கப்படும். கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் எழுதிய கடிதம் கிடைக்காததற்காக வருந்துகிறேன். இது குறித்து விசாரிக்க உள்ளேன்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடந்துவரும் தெலுங்கானா பிரச்சனையில், திடீரென முடிவு எடுக்க முடியாது. கொஞ்சம் கால அவகாசம் எடுத்து சாதக, பாதக கருத்துகளை ஆராய்ந்த பின்னரே அந்த பிரச்சனையில் முடிவு எடுக்க முடியும் என்றார்.