நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
மாநிலத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் என 1,32,402 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்தது. இதில் 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மீதமுள்ள 1,12,697 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 4.11 லட்சம் பேர் போட்டியிட்டனர். இதில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.
உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 78.5 சதவீதமாகும்.
முதல் கட்டத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னை குறைவான அளவாக 51.63 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாயின. வேலூர் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 71 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
இந்த வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. சென்னையைப் பொருத்தவரை 200 வார்டுகள் மற்றும் மேயர் பதவிக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் 18 மையங்களில் எண்ணப்பட உள்ளன.
மதுரை மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட வார்டுகளுக்கு பதிவான வாக்குகள் 3 மையங்களிலும், பிற மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் தலா ஒரு மையத்திலும் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும்.
இந்த மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக போலீசார் தவிர வெளி மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை பணிகளைப் பார்வையிட 6 மாநிலங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர்.
சென்னையில் 18 இடங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.
இணையதளத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு: சோ. அய்யர்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகள் மற்றும் மேயர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 18 மையங்களில் நடைபெறுகிறது. பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களை மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சோ. அய்யர் கூறியதாவது:
18 வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 35 அரங்குகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். ஒவ்வொரு அரங்கிலும் 6 முதல் 10 மேஜைகள் வரை போடப்பட்டு மேயர் வேட்பாளர்களுக்கு தனியாகவும், வார்டு உறுப்பினர்களுக்கு தனியாகவும் மேஜைகள் அமைத்து ஒரு சுற்றுக்கு 6 முதல் 10 மேஜைகளுக்கான வாக்குகள் எண்ணப்படும்.
இந்த வாக்கு எண்ணும் போது வீடியோ, வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்படும். வாக்குகள் எண்ணும் பணிகளை பார்வையிடுவதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 35 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகளை இணைய தளத்தின் மூலம் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு வாக்கு எண்ணிக்கையானது வெளிப்படையாகவும், உண்மையாகவும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கைக்கு நான்காயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது போலவே வாக்கு எண்ணிக்கையும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெறும் இவ்வாறு சோ. அய்யர் தெரிவித்தார்.