நவ. 21ல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டம் தொடக்கம்- லோக்பால் புயல் வீசும்
டெல்லி: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஜன் லோக்பால் மசோதா விவகாரம் பெரும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடர் ஸ்பெக்ட்ரம் ஊழல், பின்னர் நடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் லோக்பால் விவகாரம் ஆகியவை புயலைக் கிளப்பின. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23ம் தேதி இக்கூட்டத் தொடர் முடிவடைகிறது.
இந்த முறையும் லோக்பால் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. அதேசமயம் எதியூரப்பா விவகாரத்தை வைத்து பாஜகவை சமாளிக்க காங்கிரஸ் தரப்பு தயாராகி வருகிறது. ஆனால் அன்னா ஹஸாரே குழுவினர் மீதான தாக்குதலை வைத்து காங்கிரஸை கலகலக்க வைக்க பாஜக தரப்பு தயாராகி வருகிறது.
லோக்பால் விவகாரம், ஊழல் பிரச்சினைகள், தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பல சூடான பிரச்சினைகளுடன் இரு தரப்பும் முட்டி மோதிக் கொள்ளவுள்ளதால் வழக்கம் போல இந்தக் கூட்டத் தொடரும் உருப்படியாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.