பக்ரீத் பண்டிகை: உளுந்தூர்பேட்டை சந்தையில் ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உலகமெங்கும் பக்ரீத் பண்டிகை முகமதியர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையன்று ஏழைகள், உறவினர், நண்பர்களுக்கு ஆகியோருடன் சேர்ந்து குர்பானி வெட்டப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் ஓட்டகங்கள் வெட்டப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஆடுகளை வெட்டுகின்றனர். அதனால் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகளின் விற்பனை அதிகரிக்கும்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையி்ல் வாரந்தோறும் புதன்கிழமைகளில் கூடும் ஆட்டு சந்தையில் நேற்று ஆடு விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. உளுந்தூர்பேட்டை சந்தைக்கு விழுப்புரம் மாவட்ட பகுதியில் இருந்து மட்டுமின்றி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரி வேலூர், திருச்சி என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்படுகிறது.
வரும் 7ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் இந்த வாரம் ஆடு விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர் அதிகளவில் சந்தைக்கு வந்திருந்தனர். ஆடுகளின் வளர்ச்சி மற்றும் கறியை பொறுத்து 7,000 முதல் 12,000 ரூபாய் வரை விற்பனையாகியது.
காலை 7 மணியில் இருந்து மாலை வரை நடந்த சந்தையில் 30,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சுமார் 5 கோடி ரூபாய் வியாபாரம் நடந்ததாக ஆடு விற்பனையாளர்கள் தெரிவித்தனர். ஆடுகளை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றதால் ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.