ஜாமீன் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்ட கனிமொழி- அதைப் பார்த்து அழுத ராசாத்தியம்மாள்!
டெல்லி: இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்து வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்த கனிமொழி ஜாமீன் மறுக்கப்பட்டவுடன் கண்ணீர் விட்டார். கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மகளைப் பார்த்து ராசாத்தி அம்மாள் கதறி அழுததால் கோர்ட்டே சோகமயமானது.
2ஜி ஊழல் வழக்கில் கைதான திமுக எம்பி கனிமொழி கடந்த 5 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். ஏற்கனவே 3 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று கனிமொழியும், அவரது குடும்பத்தார் மற்றும் திமுகவினர் நம்பினர்.
இதனால் கனிமொழியை வீ்ட்டுக்கு அழைத்து வருவதற்காக அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, தாயார் ராசாத்தி அம்மாள், சகோதரர் மு.க. ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் டி. ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் டெல்லி சென்றனர். நடிகை குஷ்பூவும் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் கனிமொழிக்கு இன்று மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த திமுகவினர் மற்றும் குடும்பத்தினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். கனிமொழிக்கு கண்ணீர் பொங்கி வந்தது. அதை அடக்க முடியாமல் தவித்தார். அதைப் பார்த்த ராசாத்தி அம்மாள் கதறி அழுதார். அம்மா அழுவதைப் பார்த்த கனிமொழியும் உடைந்து போய் அழுது விட்டார்.
பின்னர் கனிமொழியை போலீஸார் திஹார் சிறைக்குக் கொண்டு சென்றனர்.