ஜெயலலிதாவின் அராஜகத்தையும் மீறி திமுகவுக்கு 30 சதவீத ஓட்டுகள் கிடைத்தது-மு.க. ஸ்டாலின்
பாளையங்கோட்டை: உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் அராஜகத்தையும் மீறி திமுகவுக்கு 30 சதவீத வாக்குகள் கிடைத்தது என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள திமுகவினரை சந்திப்பதற்காக அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்தார்.
சிறையில் கட்சியினரை பார்த்த பின் சிறைவாசலில் அவரிடம் நிருபர்கள் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக பின்னடைவை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதாவின் அராஜகப்போக்கையும் மீறி திமுகவுக்கு 30 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
திமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று தெரிவித்தவரிடம், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஓட்டம் பிடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அடிக்கடி அதிமுக அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படுவது குறித்து ஏன் கேள்வி எழுப்பப்படுவதில்லை என கேட்டார்.