கேரள காங்கிரசாருக்கு கூட தெரியாமல் குருவாயூர் கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்
குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு திடீர் விஜயம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவசர, அவசரமாக தரிசனத்தை முடித்து கொண்டு திரும்பினார். இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்படவில்லை.
கேரள மாவட்டம், திருச்சூர் மாவட்டத்தில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் காலையில் திடீரென காரில் வந்து இறங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு காலை 11.30 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய சென்றார்.
சாதரண பக்தர்களை போல வேட்டி மற்றும் மேல் துண்டுடன் கோவிலுக்கு வந்தார். இதனால் கோவிலில் இருந்த பக்தர்களுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
கோவிலுக்குள் நுழைகையில் சிதம்பரத்தை கோவில் நிர்வாக அதிகாரி வேணுகோபால் வரவேற்றார்.
சிறிது நேரத்தில் அவரை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தவுடன் கூட்டம் அதிகரித்தது. இதனால் 20 நிமிடங்களில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்தும் சில நிமிடங்களில் புறப்பட்டுவிட்டார்.
மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள், முதல்வர் உம்மன் சாண்டி, போலீசார் உட்பட யாருக்கும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.