கபடி உலகக் கோப்பை: சிறுநீர் மாதிரி தரமறுத்த யுஎஸ் அணிக்கு தடை
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்து வரும் உலகக் கோப்பை கபடிப் போட்டிகளில் விளையாட அமெரிக்க அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் படிண்டாவில் கடந்த 1ம் தேதி உலகக் கோப்பை கபடிப் போட்டிகள் துவங்கின. வரும் 20ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளில் 14 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஊக்கமருந்து உட்கொள்கிறார்களா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது வரை நடத்திய சோதனையில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த சுமார் 30 வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது தெரிய வந்தது.
வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த 5 வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டதற்காக போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பூல் 'பி'யில் உள்ள அமெரிக்க அணியினரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களிடம் சிறுநீர் மாதிரி கோட்டதற்கு அவர்கள தர மறுத்துவிட்டனர். இதையடுத்து அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, கனடா அணிகள் ஏற்கனவே காலிறுத்திக்குள் நுழைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானும் காலிறுதிக்கு தகுதியாகிவிடும் என்று தெரிகிறது.
இறுதிப் போட்டி மற்றும் நிறைவு விழா வரும் 20ம் தேதி லூதியானாவில் நடக்கிறது.