2ஜி வழக்கு விசாரணை திடீரென திகார் சிறை வளாக கோர்ட்டுக்கு மாற்றம்!
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு வந்திருந்த குற்றவாளிகளிடம் நீதிபதி ஒ.பி சைனி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி வியாழக்கிழமையில் இருந்து 2ஜி வழக்கு விசாரணை திகார் சிறை வளாகத்திலேயே நடைபெறும் என்று அறிவித்தார்.
ஆனால், இதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கை திகார் சிறை வளாகத்துக்கு மாற்றுவதற்கு கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே எதிர்ப்புத் தெரிவித்தனர். ராசா கூறுகையில், இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றார்.
திகார் சிறை நீதிமன்றத்துக்கு விசாரணையை மாற்றுவதற்கு தடைவிதிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்திடம் கோரப் போவதாகவும் அவர்களது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.