டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தமிழக அரசு தடை
சென்னை: சர்ச்சைக்குரிய டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.அணைக்கட்டு உடைந்து லட்சக்கணக்கான மக்கள் மரணமடைவது போல தயாரிக்கப்பட்டுள்ள டேம் 999 ஆங்கிலப்படம் இந்தியாவில் இந்தவாரம் வெளியாகிறது. இந்த திரைப்படம் முல்லைப்பெரியாறு அணையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியிருந்தனர்.
வெளிநாட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் மக்களிடம் பீதியை ஏற்படுத்தவே இது போன்று சர்ச்சைக்குரிய படத்தை எடுத்துள்ளதாகவும், இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடப்போவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்களும் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் டேம் 999 படத்தை வெளியிடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது