பெரிய பாரம் குறைந்தது போல உள்ளது, கனிமொழி குறித்து குஷ்பு சந்தோஷம்!
சென்னை: கனிமொழி ஜாமீனில் விடுதலையாகியிருப்பது பெரிய பாரம் குறைந்தது போல உள்ளது என்று கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.
இதுகுறித்து குஷ்பு கூறுகையில், 6 மாத காலமாக டெல்லி திஹார் சிறையில் இருந்த கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி. வரவேற்கக்கூடிய செய்தி.
கனிமொழி விடுதலையான தகவலையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். தி.மு.க.வில் உள்ள எங்களைப் போன்ற தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறோம்.
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக தலைவரை சந்தித்தேன். அவரிடம் எனது மகிழ்ச்சியை தெரிவித்தேன். தலைவர் மிகுந்த திருப்தியாக இருக்கிறார். கனிமொழி 6 மாதங்களாக பிரிந்திருந்த தனது குடும்பத்தினருடன் இருக்கவேண்டும். அவர் சென்னைக்கு எப்போது வருவது என்பதை தலைவரிடம் பேசி முடிவு செய்வார்.
எப்போது வந்தாலும் கனிமொழியை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் ஜாமீனில் வெளி வந்ததால் எங்களுக்கு பெரும் பாரம் குறைந்ததுபோல இருக்கிறது. கனிமொழி சென்னை வரும்போது வரவேற்க எல்லோரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் குஷ்பு.
முன்னதாக நேற்று கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்த குஷ்பு, வீட்டுக்கு முன்பு கூடியிருந்த தொண்டர்களிடம் லட்டு வழங்கி தனது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்.