வால்பாறையில் 'வாக்கிங்' வந்த சிறுத்தை-நோயாளிகள் அலறல்-பொதுமக்கள் பீதி
வால்பாறை: வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் புகுந்த ஒருசிறுத்தை அங்குள்ள பிரசவ வார்டு வழியாக புகுந்து, ஆபரேஷன் தியேட்டர் முன்புறம் படுத்து விட்டுச் சென்றதால் நோயாளிகள் அலறி பீதியடைந்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் கொடிய விலங்கான சிறுத்தை சர்வ சாதாரணமாக அடிக்கடி வந்து செல்கின்றது.
இந்த நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிறுத்தை ஒன்று திடீரென புகுந்து, பிரசவ வார்டு வழியாக ஆபரேஷன் தியேட்டர் முன்புறம் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தது. பின்பு, அங்கிருந்து பிரேத பரிசோதனை அறை பகுதியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தது.
தகவல் அறிந்த நோயாளிகள் அலறியடித்து மருத்துவமனையை வி்ட்டு ஓட்டம் பிடித்தனர். பொது மக்கள் சத்தம் கேட்ட சிறுத்தை அருகில் இருந்த மயானத்தில் மாயமாக மறைந்தது.
இது குறித்து மருத்துவமனையில் உறவினரை பார்க்க வந்த முனியப்பன் என்பவர் கூறுகையில்,
இதுவரை எஸ்டேட் பகுதிகளில் மட்டும் நடமாடிய சிறுத்தைகள், தற்போது நகர பகுதியிலும் சர்வசாதாரணமாக வந்து செல்வது ஆபத்தானதாகும். எனவே, இந்த விவகாரத்தில் வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வால்பாறையில் சிறுத்தை அடிக்கடி வந்து செல்வதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.