ஆப்கானிஸ்தான் முஹர்ரம் நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு- 30க்கும் மேற்பட்டோர் பலி
ஷியா முஸ்லீம்கள் முஹர்ரம் ஊர்வலம் கிளம்புதவற்காகத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்புகளை தீவிரவாதிகள் தற்கொலைப் படையினர் மூலம் நடத்தியுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
காபூலில் உள்ள மசூதியில் முஹர்ரம் ஊர்வலத்திற்காக ஷியா முஸ்லீம்கள் கிளம்பிக் கொண்டிருந்தபோது முதல் தாக்குதல் நடந்தது. தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை மசூதியின் வாசலில் நின்றபடி வெடிக்கச் செய்தான். அதில் 30 கொல்லப்பட்டனர்.
அதேபோல மஸார் இ ஷெரீப் என்ற இன்னொரு நகரில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். இங்கு சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்ப்டடார்.
680 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கின் கர்பலா நகரில் நடந்த மோதலில், நபிகள் நாயகத்தின் பேரன் ஹூசேன் படுகொலை செய்யப்பட்டார். அவரது உயிர்த் தியாகத்தை குறிக்கும் வகையில் அஷுரா எனப்படும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் இதே நாளில் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷியா மக்கள், அஷுரா நிகழ்ச்சியை கடைப்பிடிப்பதற்கு ஆப்கானிஸ்தானில் முன்பு தலிபான்கள் தடை விதித்திருந்தனர். தலிபான்களின் ஆட்சி அழிக்கப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானில் அஷுரா நிகழ்ச்சியையும், மொஹர்ரம் பேரணியையும் ஷியா முஸ்லீம்கள் பெருமளவில் நடத்தி வருகின்றனர்.