முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு: டிஜிபி, தலைமைச் செயலாளர், அதிகாரிகளுடன் ஜெ. ஆலோசனை
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத் தரப்பில் கடும் பிடிவாதம் காட்டி வருகின்றனர். தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்களின் நிறுவனங்களுக்கு எதிராகவும் கேரளாவில் ஆங்காங்கு வன்முறை மூண்டுள்ளது. இதை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த மாநில அரசும், காவல்துறையும் தவறி விட்டது.
தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியும் கூட கேரள அரசு இதுவரை இரும்புக் கரம் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்தே தமிழகத்தில் கேரளாக்காரர்களுக்கு எதிராக சிலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அணையைப் பாதுகாப்புது குறித்து டிஜிபி ராமானுஜம், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் முதல்வர் ஜெயலலிதா விவாதித்தார். அப்போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணையைக் கண்காணிப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.